படித்த பிடித்த கட்டுரைகளின் தொகுப்பு

Saturday, March 10, 2007

மஹாராஷ்டிரா குண்டுவெடிப்புகள்: சங் பரிவாரின் முகமூடி கிழிகிறது!

மஹாரஷ்டிராவில் அடிக்கடி நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் RSS உள்ளிட்ட சங் பரிவார சக்திகள் என்பதற்கான அதிக ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த நாந்தேட் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ராகுல் மோகன் என்பவரை உண்மை அறியும் மயக்கநிலை சோதனைக்கு (Narco Analysis Test) உட்படுத்திய போது அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல விவரங்கள் வெளிப்பட்டுள்ளன.

நாந்தேட் குண்டு வெடிப்பு அல்லாமல் ஜல்னா, புர்னா, பர்ஃபானி பள்ளிவாசல்களில் நடந்த குண்டுவெடிப்புகளிலும் தனக்கு பங்குள்ளதை ராகுல் ஒத்துக் கொண்டுள்ளார். வெடிகுண்டு தயார் செய்வதற்காக தனக்கு 45,000 ரூபாய் கிடைத்ததாகவும் ராகுல் ஒத்துக் கொண்டுள்ளார். RSS - பஜ்ரங்தள் அமைப்புகளின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் பிரச்சாரகர்கள் மூலமாக தனக்கு அப்பணம் கிடைத்ததாகவும் கூறினார். வெடிகுண்டு தயார் செய்வதற்கான அப்பணத்தை மூன்று அரசியல் தலைவர்கள் கொடுத்து விட்டதாக ராகுல் இச்சோதனையின் போது கூறியிருந்தாலும் அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க இதுவரை காவல்துறையால் முடியவில்லை என நாந்தேட் குண்டுவெடிப்புகள் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்தி வரும் கமிட்டி சேர்மன் நீதிபதி கோல்சே பாட்டீல் அறிவித்தார்.

இந்த தலைவர்கள் யாரென்பதை கண்டுபிடிக்கவும், மும்பை, மாலேகாவ் தொடங்கிய குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் நடந்த சதியாலோசனைகளை வெளிக்கொணரவும் நீதித்துறை (Judicial) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசிடம் அவர் கோரினார். நாந்தேட் விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்காக "வகுப்புவெறி எதிர்ப்பு (Communalism Combat) மராத்தி பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு" நடத்திய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது முன்னாள் நீதிபதியான கோல்ஸே இவ்வாறு கூறினார். அமைக்கப்படும் உயர்மட்ட விசாரணைக் குழுவில் தேசிய மனித உரிமை கழக அங்கத்தினர், நடுநிலை சமூக சேவையினர் போன்றவர்களைச் சேர்க்க வேண்டும் எனவும் கோல்சே கூறினார்.

நீதிபதி கோல்சே, நாக்பூர் RSS அலுவலகத்தில் போலியாக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னால் இருந்த RSS - காவல்துறை சதியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் ஆவார்.

வெடிகுண்டு தயார் செய்யும் பொழுது நிகழ்ந்த தவறே நாந்தேட் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருந்த போதும், நாந்தேட் குண்டுவெடிப்பை "பட்டாசு தொழிற்சாலையில் நடந்த ஒரு சாதாரண விபத்து" என்று கூறி காவல்துறை சம்பவத்தை மூடி மறைக்க முயன்றது சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காகவே ஆகும். இது மீண்டும் ஒரு சங் பரிவார - காவல்துறை மறைமுக தொடர்புகளுக்கான ஆதாரமாகும். சங் பரிவாரத்துடன் மறைமுகமாக நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் உளவுத்துறை (Intelligence Bureau) குண்டு வெடிப்புகள் தொடர்பாகவும், தேசவிரோத செயல்கள் தொடர்பாகவும் கடந்த 60 வருடங்களாக அரசுக்கு தவறான விவரங்களை மட்டுமே வழங்கிக் கொண்டிருப்பதாகவும் நீதிபதி கோல்சே சுட்டிக்காட்டினார்.

நாந்தேட் குண்டு வெடிப்பு குறித்த உண்மைகளை வெளியில் கூறுவதற்கு பொதுமக்கள் அஞ்சுவதாக விசாரணை கமிட்டி வழிநடத்துனர் (Convener) டீஸ்தா ஸெற்றல்வாத் கூறினார். மேலும், "பரிசோதனைக் குழுவின் அறிக்கை வெளிவரும் முன்பே 'சம்பவத்திற்கு பட்டாசு வெடிப்பு தான் காரணம்' என காவல்துறை அவசர கதியில் பத்திரிக்கையாளர்களிடம் செய்தி கொடுத்தமைக்குப் பின்னால் நிச்சயம் ஏதோ ஒரு சதி உள்ளது. சம்பவத்தில் வெடித்த குண்டின் வீரியத்தால் கிட்டங்கியின் கதவுகள் (Godown Shutters) 40 அடி தூரத்திற்கு வெடித்து சிதறியது சம்பவத்திற்கு பட்டாசு வெடிப்பு காரணமாக இருக்க இயலாது என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். மேலும் சம்பவ இடத்தில் ஒரு பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வந்ததாக அங்கு குடியிருக்கும் மக்களில் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதும் மிக முக்கிய ஆதாரமாகும்" எனவும் டீஸ்தா கூறினார்.

ராகுல் மோகனுக்கு நடத்தப்பட்ட டெஸ்டின் மூலம் வெளிப்பட்ட அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய விஷயங்களின் அடிப்படையில் RSS, பஜ்ரங்தள், வி.இ.ப, இந்து மகா சபை, சிவசேனா போன்றவைகளை தீவிரவாத இயக்கங்களாக அறிவித்து அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் விசாரணைக் கமிட்டி வேண்டுகோள் விடுத்தது. நாந்தேட் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை கமிட்டி 5 தினங்களாக நடத்திய விசாரணை அறிக்கையை வரும் தினங்களில் அரசுக்கு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் நடக்கும் எல்லாவிதமான குண்டுவெடிப்பு அசம்பாவிதங்களுக்கும் பின்னால் ஏதாவது முஸ்லிம் குழுக்களே இருப்பதாக கடந்த காலங்களில் வலிந்து திணிக்கப்பட்டு "தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் இஸ்லாம்" என்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருப்பதன் பின்னணியிலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 60 வருடங்களாக இந்திய புலன்விசாரணைக் குழுவில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படாததும், காவல்துறை, இராணுவம் போன்ற முக்கிய துறைகளில் முஸ்லிம்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதிலும் ஒரு நீண்டகால திட்டமிட்ட சதிச்செயல் இருப்பது தற்போது வெளிவரும் தகவல்களின் மூலம் சிறிது சிறிதாக உறுதிபடுத்தப்படுகிறது.

புதன், 07 மார்ச் 2007

நன்றி: சத்திய மார்க்கம்

தொடர்புடைய இதர சுட்டிகள்:
முஸ்லிம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள்!
ரகுநாத் கோவில் தாக்குதல்: குற்றவாளிகள் யார்?

Friday, March 9, 2007

அமுக்கப்பட்ட நேரு..திரிக்கப்பட்ட காந்தி!

அமுக்கப்பட்ட நேரு..திரிக்கப்பட்ட காந்தி!
சீற்றம் கிளப்பும் சரித்திர திருத்தங்கள் !

'கடந்த சில ஆண்டுகளாக மதச்சார்பின்மைக் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் சீரழிக்கப்படுகின்றன.
உண்மையான கல்வி அறிஞர்கள் ஓரங்கட்டப்படு கிறார்கள். கல்வித் துறையே காவி மயமாக்கப்படுகிறது. பாடப் புத்தகங்களில் வரலாற்றை திரித்து எழுதுகிறார்கள்' என்று ஆவேசமாக வெடித்திருக்கிறார் சோனியா காந்தி.

அலிகார் பல்கலைக்கழகத்தில், 'நேருவும் தேசியவாதமும்' என்ற தலைப்பில் கடந்த வாரம் பேச வந்தபோதுதான் இப்படி சீறித் தள்ளினார் சோனியா.
இதே விஷயத்தை கம்யூனிஸ்ட் தலைவர்களும் எதிரொலித்தபடி இருக்கிறார்கள்.

"வரலாற்றையே மாற்றி எழுதுவது வருங்கால சந்ததியினருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்" என்று 'இந்திய வரலாற்றுப் பேராயம்' என்ற அமைப்பும் கண்டிக்கிறது. 'தமிழக வரலாற்றுப் பேராயம்' என்ற அமைப்பும் இதே குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறது.

அரசியல் தலைவர்கள், வரலாற்று அறிஞர்கள், கல்வியாளர்கள் என மொத்தப் பேரும் சேர்ந்து எதிர்ப்புக் காட்டக் காரணம் - என்.சி.இ.ஆர்.டி. (NCERT) வெளியிட்டிருக்கும் வரலாற்று பாடப் புத்தகங்கள்.

கல்விக் கொள்கை களை உருவாக்கும் மத்திய அரசின் உயர் நிறுவனங் களில் ஒன்றுதான் என்.சி.இ.ஆர்.டி. 'கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கழகம்' என்று இதற்குப் பெயர். இவர்கள் வெளியிடும் பாடப்புத்தகங்கள்தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பாடமாக இருக்கிறது. ஐ.ஏ.எஸ். போன்ற மதிப்பிற்குரிய தேர்வுகளை எழுதுபவர்களும்கூட என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களைத்தான் படித்துத் தயாராவார்கள்.

ஆறாம் வகுப்புக்கு 'இந்தியாவும் உலகமும்' என்ற புத்தகத்தையும் பதினோராம் வகுப்புக்கு, 'பண்டைய இந்தியா', 'இன்றைய இந்தியா', 'மத்திய கால இந்தியா' என்ற மூன்று புத்தகங்களையும் கடந்த ஆண்டு என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டபோதே சலசலப்பு கிளம்பியது.

சமீபத்தில் ஏழு, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான மூன்று வரலாற்றுப் புத்தகங்கள் வெளியாக.. அவை லேட்டஸ்ட் புயலுக்குக் காரணமாகி விட்டன.

சென்னையில் 'சுயமரியாதை இயக்கம்' என்ற அமைப்பின் சார்பில் கடந்த சனிக்கிழமை கூடிய கல்வியாளர்கள் கூட்டம், இந்தப் புத்தகங்களை கடுமையாக கண்டித்தது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஜெகதீசன் பேசும்போது, "வரலாற்றை திரித்து எழுதுவது புதிதல்ல. ஆனால், பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு தங்களின் நோக்கத்துக்காக வேண்டுமென்றே இதை செய்யத் தொடங்கியிருக்கிறது. உண்மைகளை மறைப்பது, இடைச் செருகல் செய்வது, தீர்மானமான சில உண்மைகளை மேலோட்டமாக மழுப்புவது என்று மூன்று விதமான தவறுகள் என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களில் நடந்திருக்கிறது.

'இந்திய வரலாற்று காங்கிரஸ்' என்ற அமைப்பு எழுபது ஆண்டுகளாக இருக்கிறது. வரலாற்றில் எது உண்மை, எது தவறு என்று தீர்மானிக்க முழுத் தகுதியுள்ள அமைப்பு அதுதான். அந்த அமைப்பு, இந்தப் புத்தகங்களை முழுமையாக நிராகரித்துள்ளது. வகுப்பறைகளில் இதுபோன்ற திரிபுகளை அனுமதிப்பது, பெரும் கலாசார கலவரத்தையே உருவாக்கிவிடும்" என்றார்.

அதற்குப் பிறகு பேசிய பேச்சாளர்கள் அனைவரும், இந்த புத்தகங்களில் உள்ள தவறுகளைப் பட்டியலிட்டார்கள்.

"பி.ஜே.பி. அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தங்களது ஆட்களைப் புகுத்தியது. தங்கள் கொள்கைக்கு விரோதமான விஷயங்கள் என்பதால், 41 தகவல்களை என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களில் இருந்து நீக்கினார்கள். அடுத்து பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவிகளை வைத்து புதிய புத்தகங்களை எழுத வைத்தார்கள். அபத்தமான இந்த புத்தகங்களில் ஆபத்தான பல விஷயங்கள் இருக்கின்றன" என்றார் சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் அ. மார்க்ஸ்.

"முதல் சுதந்திரப் போராட்டத்தில் தொடங்கி (1857), நவீன இந்திய வரலாறு வரை எழுதியிருக்கும் நூலாசிரியர் 1954-ம் ஆண்டுடன் நிறுத்திக் கொள்கிறார். அதற்குப் பிறகு எழுதினால், அவர்களுக்கு பிடிக்காத நேரு பற்றிச் சொல்ல வேண்டும். அதற்காகவே வரலாற்றை அத்துடன் நிறுத்தி விடுகிறார்கள். ஆனால், 96-ல் பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் உட்கார்ந்தது பற்றி இந்தப் புத்தகத்தில் வருகிறது. முந்தைய பி.ஜே.பி. ஆட்சி கவிழ்ந்தது பற்றி சொல்லும்போது, 'துரதிர்ஷ்ட வசமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற முடிய வில்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நடுநிலையாக வரலாற்றைச் சொல்லவேண்டிய புத்தகத்தில் 'துரதிர்ஷ்ட வசமாக' என்ற தனி மனித உணர்வு தேவையா?

தனிநபர் சத்தியாக்கிரகம் பற்றிச் சொல்லும் போது, முதல் சத்தியாக்கிரகி வினோபாபாவே என்று இருக்கிறது. அதற்கு பிறகு வரிசையாக வரும் தலைவர்களின் பெயர்களில் நேரு இல்லை!

நேரு பெயரை மறைக்கும் இந்த புத்தகங்கள் காந்தியையும் கொச்சைப்படுத்துகின்றன. 'கோபால கிருஷ்ண கோகலேவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்பட்ட காந்தி, 1915-18 ஆண்டுகளில் இந்திய அரசியலுக்காக எந்தப் பங்கையும் ஆற்றவில்லை' என்று கூறியிருக்கிறார்கள். இந்தியாவின் சூழல் எப்படியிருக்கிறது என்று காந்தியை ஆய்வு செய்யச் சொல்கிறார் கோகலே. இதற்காக காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். அந்த காலகட்டத்தில் காந்தி சும்மா இருந்தார் என்று சொல்ல முடியாது. பீகார், குஜராத், அகமதாபாத் ஆகிய மூன்று இடங்களில் நடந்த போராட்டத்துக்கு காந்திதான் தலைமை வகித்தார்.

இப்படி பி.ஜே.பி-க்கு யார் யாரெல்லாம் பிடிக்காத தலைவர்களோ அவர்களை கொச்சைப்படுத்தி பாடப்புத்தகங்களை தயார் செய்திருக்கிறார்கள்" என்றும் சொன்னார் அ.மார்க்ஸ்.

இந்தக் கூட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் வீ.அரசு பேசினார்.

"சிந்துச் சமவெளி நாகரிகம் பற்றித்தான் இதுவரை படித்திருக்கிறோம். ஆனால், இதை 'சிந்து-சரஸ்வதி நாகரிகம்' என்று பெயர் மாற்றம் செய்துவிட்டார்கள். சரஸ்வதி நதி, பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படும் ஒன்று. வரலாற்றை உறுதியான ஆதாரங்களை வைத்து எழுத வேண்டுமே தவிர, சில நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதக் கூடாது.

இந்தியாவைப் பலவீனப்படுத்தியவர் அசோகர் என் றும், மத நல்லிணக்கத்தை உருவாக்கப் பாடுபட்ட அக்பரை 'தினமும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்' என்றும் எழுதுகிறார்கள். அடுத்தகட்டமாக மதரீதியான நேரடிப் பிரசாரமும்கூட அடுத்த ஆண்டு புத்தகத்தில் வந்துவிடும் போலிருக்கிறது" என்று முடித்தார் அரசு.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாதிக் பேசும்போது,

"ஒன்பதாம் வகுப்புக்கான 'இன்றைய இந்தியா' புத்தகத்தின் முதல் பதிப்பில், காந்தி கொலை பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இரண்டாம் பதிப்பில், 'வழிபாட்டுக் கூட்டம் ஒன்றுக்குச் செல்லும் வழியில் நாதுராம் கோட்ஸே என்பவ ரால் காந்தி கொல்லப்பட்டார்' என்று போகிற போக்கில் ஒப்புக்குச் சேர்த்திருக்கிறார்கள். காந்தி படுகொலை என்பது இவ்வளவு சுருக்கமாக தாண்டிப் போக வேண்டிய வரலாற்று நிகழ்வா? விட்டால், 'காந்தி தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்' என்றுகூட அடுத்த பதிப்பில் எழுதிவிடுவார்கள்" என்ற வேதனைப்பட்ட சாதிக்,

"இதையெல்லாம் தட்டிக் கேட்டு ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்கள் சிலர். நாமும் சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டுவோம். வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்குள் நல்ல தீர்ப்பு வரவில்லை என்றால், தெருவில் இறங்கி நான் போராடப் போகிறேன்" என்று உணர்ச்சி வசப்பட்டார்.
என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டிருக்கும் ஏழு வரலாற்றுப் புத்தகங்களிலும் என்னென்ன பிழைகள், திரிபுகள் இருக்கின்றன என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தகங்கள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. இதுபற்றி ஆராய்ச்சி செய்ய, தமிழகக் கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப் பவும் தயாராகிறது.

இதற்கிடையில் இந்தப் புத்தகங்களில் வரலாற்றுத் திரிபு எதுவும் செய்யப்பட வில்லை என்று வாதிடவும் கல்வியாளர்களிலேயே இன்னொரு தரப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது.

ப. திருமாவேலன்
படங்கள்: பொன். காசி

நன்றி: ஜூனியர் விகடன் 31-12-03

Tuesday, February 6, 2007

தமிழகத்தில் பௌத்தம் மறையவில்லை... அழிக்கப்பட்டது!

கௌதம புத்தர் மகா பரிநிர்வாணமடைந்த 2550-ம் ஆண்டை மத்திய, மாநில அரசுகள் இப்போது கொண்டாடுகின்றன. இதற்காக இந்திய அரசு பத்து கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. பௌத்தம் குறித்த மாநாடு ஒன்றை நடத்துவது, அதற்கு உலகமெங்குமிருந்து அறிஞர்களை அழைப்பது, நாளந்தாவில் உள்ள பௌத்த மடாலயத்தைப் புதுப்பிப்பது எனப் பல்வேறு திட்டங்களை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அம்பிகா சோனி அறிவித்திருக்கிறார். பீகார், உத்தரப்பிரதேசம் முதலான மாநில அரசுகளும் இந்த ஆண்டை மிக விமரிசையாகக் கொண்டாடி வருகின்றன. மற்ற இடங்களில் கடந்த மே மாதத்திலேயே இந்தக் கொண்டாட்டங்கள் துவங்கி விட்டாலும், தமிழ்நாட்டில் இப்போதுதான் நமது மாநில அரசு விழா ஒன்றை நடத்தியுள்ளது.

பௌத்தத்தை வடஇந்திய மதம் என்று பலர் சொல்வதுண்டு. ஆனால், அது உண்மையல்ல... பௌத்தத்துக்கும் தமிழுக்குமான உறவு மிகவும் தொன்மையானது. இந்தியாவின் பிற மாநிலங்களில் பௌத்தம் அழிந்து போனதற்குப் பிறகும்கூட தமிழ்நாட்டில் அது தழைத்துச் செழித்திருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்ட செம்பு மற்றும் கல்லால் ஆன புத்தர் சிலைகளை ஆராய்ந்த கலை வரலாற்று அறிஞர் வித்யா தெஹேஜியா என்பவர், ‘‘இதுவரை நம்பப்பட்டு வந்ததைவிடவும், நீண்ட காலத்துக்கு மிகுந்த பிடிப்போடு பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. அது 15 மற்றும் 16-ம் நூற்றாண்டுகள் வரை தமிழ்நாட்டில் உயிர்த்துடிப்போடு இருந்திருக்கிறது’’ எனக் குறிப்பிடுகிறார். இன்றைக்கும்கூட தமிழ்நாட்டின் பல கிராமங்களில் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள புத்தமங்கலம், போதிமங்கலம் முதலான ஊர்களின் பெயர்களும்கூட இங்கே செழித்திருந்த பௌத்தத்துக்கு சாட்சியங்களாகவே உள்ளன.

அப்படி இங்கே செழித்திருந்த பௌத்தம், இந்த மண்ணிலிருந்து தானாக மறைந்து விடவில்லை. வன்முறையாலும், ஒடுக்குமுறைகளாலும்தான் பௌத்தம் அழிக்கப்பட்டது. ‘‘பௌத்தத்தின் கூட்டுணர்வும், அதனடிப்படையில் அது உருவாக்கிய சமூக ஒழுங்கும் துறவிகளின் பள்ளிகள் முதல் சதாரண மக்களின் வீடுகள் வரை சமத்துவத்தை நிலைநாட்டியது. இது வர்ண பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்த ஆரிய மதத்துக்கு எதிரானதாக இருந்தது. அதன் காரணமாகவே பௌத்த, சமண மரபுகளை அவர்கள் கடுமையாக ஒடுக்கினார்கள்’’ என வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் கூறுகிறார்.

பௌத்தம் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டது என்பதை நமது இலக்கியங்கள் பதிவு செய்து வைத்துள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப்பட்ட அரசவை இலக்கியங்கள் அனைத்தும் பௌத்த, சமண மரபுகளை கடுமையாகத் தாக்குவதைப் பார்க்கலாம். கல்ஹணர் எழுதிய ‘ராஜதரங்கிணி’ விசாகதத்தரின் ‘முத்ர ராட்ஷஸ்’ எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம். தமிழில் பக்தி இலக்கியங்கள் பலவும் பௌத்தத்தையும் சமணத்தையும் தூற்றுவதைப் பார்க்க முடியும். இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் யுவான் சுவாங், அப்போது காஷ்மீரில் பௌத்த துறவிகள் ஒடுக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மட்டும் காஷ்மீரிலும், பஞ்சாபிலும் 1600 பௌத்த ஸ்தூபிகள் உடைத்தெறியப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான பௌத்த துறவிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அவர் எழுதியுள்ளார்.

‘‘திருஞானசம்பந்தர் பாண்டிய மன்னனை சமணத்தி லிருந்து சைவ மதத்துக்கு மாற்றி, அவன் மூலமாக எட்டாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றார். தமிழகத்தில் 15, 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்களில் (திருவிடைமருதூரில் உள்ள நாறும்பூ நாதர் சிவன் கோயில்) இந்த நிகழ்ச்சி பற்றி வரையப்பட்ட ஓவியங்கள் காணப் படுகின்றன’’ என்று ரொமிலா தாப்பர் கூறுகிறார்.

பௌத்த சமணக் கோயில்கள் பல இந்துமதக் கோயில் களாக மாற்றப்பட்ட வரலாறும் உண்டு. திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் வெட்டுவான்கோயில் என்ற இடத்திலுள்ள குடைவரைக்கோயில், ஏழாம் நூற்றாண்டில் சைவக் கோயிலாக மாற்றப்பட்டது.

அரசர்களின் ஆதரவை இழந்ததற்குப் பிறகு பௌத்த, சமண மடங்களும் ஆலயங்களும் தங்கள் செல்வாக்கை இழந்தன. புத்தர் சிறு தெய்வமாக்கப்பட்டார். ‘இன்று கிராமங்கள்தோறும் காணப்படுகிற அய்யனார் கோயில்கள், புத்தர் கோயில்களே’ என்பதை அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி எடுத்துக் காட்டியுள்ளார். தருமராசா என்ற பெயரும் புத்தரது பெயர்தான். ‘‘புத்தர் பெயர்களுள் ‘தருமன்’ அல்லது ‘தருமராசன்’ என்பதும் ஒன்று. பிங்கலம், திவாகரம் என்னும் நிகண்டுகளில் இப்பெயர்களைக் காணலாம்’’ என்று குறிப்பிடும் சீனி.வேங்கடசாமி, ‘தருமராசா கோயில்கள் என்பவை புத்தர் கோயில்களே, பாண்டவருள் மூத்தவரான தருமராசனுக்கும் அதற்கும் தொடர்பில்லை’ என்று விளக்கியுள்ளார்.

தமிழ் இலக்கியத்துக்கு பௌத்தம் ஆற்றியுள்ள பங்களிப்பு மிகவும் அதிகம். நமது ஐம்பெருங்காப்பியங்களும் பௌத்த, சமண மதத்தைச் சார்ந்தவை தான். உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளுக்கும் பௌத்த, சமணத்துக்குமான உறவு யாவரும் அறிந்ததே.

தமிழின் இலக்கியச் செல்வங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவை உள்ளிட்ட பதினென் கீழ்கணக்கு நூல்களில் பௌத்த நெறியே மேலாதிக்கம் செலுத்தியது என திரு.வி.க. குறிப்பிடுகிறார். ‘‘பத்துப்பாட்டு, எட்டுத்தொகை-பதிணெண் கீழ்கணக்குகளில் கொல்லாமை, கள்ளுண்ணாமை, ஊன்வேள்வி, ஊனமில் வேள்வி, பௌத்தப் பள்ளிகள் மற்றச் சமயக்கோயில்கள், பல கடவுளர் வழிபாடுகள் முதலியன சொல்லப் பட்டிருக்கின்றன’’ என்று திரு.வி.க. எடுத்துக் காட்டுகிறார். பௌத்தக் கருத்துகள் இன்றும் நம்மிடம் கலந்திருப்பது போலவே, பௌத்தர்கள் நமது கருத்துக்களை எடுத்துரைப்பதற்குப் பயன்படுத்திய பாலி மொழிச் சொற்கள் பலவும் தமிழில் இப்போதும் கலந்துள்ளன. பள்ளி, புத்தகம், கருணை, துக்கம் முதலிய சொற்கள் இதற்கு உதாரணம்.

திராவிட இயக்கத்தவர் தமது பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்ப புத்தரைத் துணைக்கு அழைத்துக் கொண்டனர். பௌத்தத் துறவிகளை அழைத்துப் பௌத்த மாநாடுகளை நடத்திய பெரியார் ஈ.வே.ரா., தான் சொல்கிற கருத்துகளைதான் புத்தரும் கூறியிருக்கிறார் என்று பேசியுள்ளார்.
பௌத்தத்தால் தமிழ் வளம் பெற்றது மட்டுமல்ல தமிழ்நாடு பௌத்தத்துக்கு செய்துள்ள பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும். நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு இணையான ஒரு பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் இருந்துள்ளது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக விளங்கிய திங்கநாகர் என்பவர் காஞ்சிபுரத்தில் பிறந்த தமிழராவார். அவரது மாணவராக இருந்து பின்னர் அதே பல்கலைக்கழகத்தின் தலைவரான தருமபாலரும் தமிழர்தான்.

இன்று உலகெங்கும் பின்பற்றப் படுகிற சென் பௌத்தம் (Zen Buddhism) தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தோன்றியதுதான். சீனாவிலும் ஜப்பானிலும் புகழ்பெற்று விளங்கும் இந்த சென் பௌத்தத்தை கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அந்த நாடுகளுக்குக் கொண்டுசென்று பரப்பியவர், போதி தருமர் என்ற தமிழராவார்! அவரது தந்தை காஞ்சிபுரத்தின் அரசராயிருந்தார். ‘சீனாவில் இந்த மதத்தை மேலும் வளர்த்தவர், வச்சிரபோதி என்ற தமிழ் பௌத்தரே’ என தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் கூறியுள்ளார்.

இன்று புத்தரின் பரிநிர்வாண நாளை கொண்டாடும் தமிழக அரசு தமிழுக்கும், பௌத்தத்துக்குமான உறவை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். இது சமயம் சார்ந்த கோரிக்கை அல்ல. தமிழ்நாடு முழுவதும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் புத்தர் சிலைகளைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் முதல் கடமையாகும்.

தஞ்சை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களிலுள்ள புத்தர் சிலைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நானும், ஆனந்த் என்ற நண்பருமாகச் சேர்ந்து பார்வையிட்டோம். இந்தியத் தொல்பொருள் துறையினால் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிற சில சிலைகள்கூட மோசமான முறையில் புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தோம். ஆயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட அரிய சிலைகளை சாலை ஓரங்களில் போட்டு வைத்திருக்கிறார்கள். பெருஞ்சேரி என்ற இடத்தில் ஒரு புத்தர் கோயில் பாழடைந்து கிடக்கிறது. ஒரு புத்தர் சிலை, பள்ளியன்றின் முன்புறம் மாணவர்கள் விளையாடும் இடத்தில் போட்டு வைக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டத்தில் ஒரு சிலை சாலையோரம் கிடக்கிறது. தலைவாசலுக்கருகில் உள்ள தியாகனூரில் இரண்டு அற்புதமான புத்தர் சிலைகள் வயலில் வேப்பமரத்தின் கீழ் புதரில் கிடக்கின்றன. இப்படி ஏராளமாகச் சொல்லலாம்.

உலகிலேயே அதிகமான சிலைகள் இருப்பது புத்தருக்குத்தான். அவற்றுள் மிக அழகான சிலைகள் தமிழ்நாட்டில் வடிக்கப்பட்டவைதான். ‘நாகப்பட்டினம் புத்தர்’ என்று ஒரு கலைமரபே இருக்கிறது. அந்த அளவுக்கு அழகான சிலைகள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. கவனிப்பின்றி போடப்பட்டிருப்பதால் பல அரிய சிலைகள் களவாடப்பட்டு இன்று அயல்நாடுகளில் பெரிய பணக்காரர்களின் சேகரிப்பில் காட்சியளிக்கின்றன.

புத்தர் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அவற்றைப் பெயர்த்துக் கொண்டுபோய் மியூசியங்களில் அடுக்குவதென்று அர்த்தமாகாது. இப்போது சிலைகள் காணப்படும் ஊர்களிலேயே அவற்றைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஊர்கள் கொண்ட வரைபடம் ஒன்றைத் (Map) தயாரித்து அவற்றை சுற்றிப்பார்க்க வசதிசெய்து தந்தால், உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும் பயணிகள் வருவது நிச்சயம். அது நமக்கு அந்நியச் செலாவணியையும் ஈட்டித்தரும்.

புத்தரது 2500-வது பரிநிர்வாண நாள் 1956-ல் கொண்டாடப்பட்டது. அப்போது நேரு பிரதமராயிருந்தார். உலகத்தின் கவனத்தை ஈர்க்கின்ற விதத்தில் அந்தக் கொண்டாட்டம் இருந்தது. அப்படி ஒர் ஆர்வம் இன்று மத்திய அரசிடம் தென்படவில்லை. அண்ணல் அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவ முடிவெடுத்திருந்த நேரம் அது. அதனால் பௌத்தமும் இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என்று ஆக்குவதற்கு அந்தக் கொண்டாட்டங்களை ஆட்சியாளர்கள் அப்போது பயன்படுத்திக்கொண்டனர். அந்த மாதிரியான நெருக்கடி எதுவும் இப்போது இல்லை. எனவே, இன்று அடக்கிவாசிக்கிறார்கள் போலும். ஆனால், முன்பு எப்போதையும்விட இன்றுதான் பௌத்த நெறிகளின் முக்கியத்துவம் கூடியிருக்கிறது. பௌத்தத்தை ஒரு மதமாகக் குறுக்கிவிடாமல் அதன் சாரத்தை ஒவ்வொருவரும் ஏற்பது அவசியம். ‘‘அறிவியல் சிந்தனையால் விழிப்படைந்த ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே நெறி பௌத்த நெறிதான்’’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டார்.

‘‘புத்தமதம் அல்லது புத்தக்கொள்கை என்று சொன்னால், அது புத்தருக்கு மட்டுமே உரிமையான கொள்கையன்று. அது அறிவுக்கு உரிமையான கொள்கை. அறிவுதான் ஆசான் என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார் புத்தர்’’ என்று குறிப்பிட்டார் பெரியார். இந்த மாபெரும் தலைவர்களின் வழிநடக்கும் தமிழக அரசு, இந்தத் தருணத்தைப் பயன்படுத்தித் தமிழுக்கும் பௌத்தத்துக்குமான உறவைப் புதுப்பிக்க முன்வர வேண்டும். வள்ளுவரைப்போல புத்தர் மீதும் பற்றுகொண்ட நமது முதல்வர் நிச்சயம் இதைச் செய்வாரென நம்புவோம்.

- ரவிக்குமார் எம்.எல்.ஏ
ஜூனியர் விகடன் 07-02-07